கொலைக் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு விளக்கமறியல்

கொலை உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சந்தேக நபரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

தலங்கம பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில், சந்தேக நபர் 12 கிராம் 200 மில்லிகிராம் அளவிலான ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த நபர் சமீபத்தில் தலவத்துகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். 

சந்தேக நபர் தலவத்துகொட பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என்றும், தற்போது வெளிநாடுகளில் தலைமறைவாகி இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணியிருப்பதும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 

முகத்துவாரம் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்ய முயற்சித்தமை, ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் கடத்தல் ஆகிய வழக்குகள் அவர் மீது உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சந்தேக நபர் கம்பஹா பகுதியில் இடம்பெற்ற இருவேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் போது துப்பாக்கிதாரி பயணித்த மோட்டார் சைக்கிளை செலுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. 

அத்துடன் வெலிவேரிய பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை முயற்சியின் போதும் மோட்டார் சைக்கிளை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த குற்றங்களுக்காக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் போலி இலக்கத் தகடுகளைக் கொண்ட மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

Exit mobile version