No products in the cart.
இஸ்ரேலிய பணயக்கைதிகளில் எழுவர் விடுவிப்பு
ஹமாஸ் அமைப்பால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 7 பேர் விடுக்கப்பட்டுள்ளனர்.
காசா மீது 2 ஆண்டுகளாக இஸ்ரேல் நடத்தி வந்த தாக்குதலில் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர்.
லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். இதுதவிர உணவுக்கு வழியின்றி பஞ்சம், பட்டினியிலும் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தைக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதில் பலன் ஏற்பட்டு உள்ளது. இதன்படி, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நேற்று முன்தினம் முதல் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது.
இதனை தொடர்ந்து, அமைதிக்கான போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்காக, டிரம்ப் இஸ்ரேலுக்கு புறப்பட்டுள்ளார்.
ஹமாஸ் அமைப்பிடம் 20 பணயக்கைதிகள் வரை உயிருடன் சிறை பிடிக்கப்பட்டு உள்ளனர் என கூறப்படுகிறது.
அவர்களில் 7 பணய கைதிகளை, போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் அமைப்பு இன்று விடுவித்து உள்ளது.
இதுபற்றிய தகவலை இஸ்ரேல் தொலைக்காட்சி அலைவரிசைகள் வெளியிட்டதும், பணயக்கைதிகளின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆனந்தத்தில் கூச்சலிட்டனர்.
2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலின் போது பிடிக்கப்பட்ட 251 பணயக்கைதிகளில், 155 பேர் இதற்கு முன்னர் மீட்கப்பட்ட போதும் 58 பேர் உயிரிழந்தனர்.
ஹமாஸால் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டதற்கு இணையாக, இஸ்ரேலும் இன்று 1,718 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.















