ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு

காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடற்படை மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான கப்பலில் இருந்த சுமார் 35 பேர், தற்போது இலங்கை கடற்படையின் மீட்புக் குழுவினரால் கரைக்கு அழைத்து வரப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். 

அவர்கள் பின்னர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கான தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

மேலும், கப்பல் விபத்துக்குள்ளான பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை விமானப்படை கண்காணிப்பு விமானம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. 

இதனிடையே, இன்று (04) பாராளுமன்றத்தில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், குறித்த IRIS Dena  என்ற குறித்த கப்பல் இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகவில்லை என்று தெரிவித்தார். 

குறித்த கப்பல் மூழ்கிக்கொண்டிருப்பதாக கடற்படைக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாகவே மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Exit mobile version