No products in the cart.
இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்த இலங்கையுடன் இந்தியா இணக்கம்! ஹரிணியுடனான சந்திப்பில் இந்திய உப ஜனாதிபதி
இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய உப ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன், பிரதமர் ஹரிணி அமரசூரியவை அலரி மாளிகையில் வைத்து நேற்று(19/04/2026) சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான பரஸ்பர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து இந்திய உப ஜனாதிபதியும், பிரதமர் ஹரிணியும் கவனம் செலுத்தினர்.
இதன்போது, பிரதமர் ஹரிணி அலரி மாளிகையில் இந்திய உப ஜனாதிபதிக்கு வழங்கிய மதிய விருந்துபசாரத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பொதுவான மரபுகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
முன்னதாக, இந்திய உப ஜனாதிபதி கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்தார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த உயர்மட்டப் பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டன.
பொதுவான வரலாறு மற்றும் கலாசார உறவுகளின் அடிப்படையில் அமைந்த பன்முக இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் கவனம் செலுத்தியதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது ‘எக்ஸ்’ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு இந்தியாவின் அயலவருக்கு முன்னுரிமை கொள்கையின் கீழ் இலங்கை மீதான அர்ப்பணிப்பை இந்திய உப ஜனாதிபதி மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், இரு நாடுகளினதும் பரஸ்பர நலன்களுக்காக ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
இந்திய வீட்டுத்திட்டம் மற்றும் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிவாரணப் பொதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
நேற்றுக் காலை 9:30 மணியளவில் 49 பேர் கொண்ட தூதுக்குழுவுடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இந்திய உப ஜனாதிபதி, இன்று வரை நாட்டில் தங்கியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.















