No products in the cart.
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை
தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதிக்கு அப்பால் இன்று (8) அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கி.மீ கடல் ஆழத்தில் ஏற்பட்டதாக அந்த மையம் கூறியுள்ளது.
பிலிப்பைன்ஸ் மற்றும் அதன் அண்டை நாடான இந்தோனேசியாவுக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
எனினும், இரு நாடுகளிலும் பெரிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டதாக உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
முன்னதாக, இந்த நிலநடுக்கம் 8.2 ரிக்டர் அளவில் இருந்ததாக குறிப்பிட்டிருந்தது. அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பும் இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி அச்சுறுத்தல் எச்சரிக்கையை விடுத்தது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் முகமையான ‘பிவோல்க்ஸ்’ இந்த நிலநடுக்கம் 7.0 ரிக்டர் அளவில் பதிவாகியிருந்ததாகக் கூறியதோடு, சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், ஒரு மீட்டருக்கும் அதிக உயரமுள்ள சுனாமி அலைகள் உருவாகி பல மணி நேரங்களுக்கு நீடிக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
இந்தோனேசியாவின் புவியியல் ஆராய்ச்சி நிறுவகம் இந்த நிலநடுக்கத்தை 7.7 ரிக்டர் அளவாகக் கணக்கிட்டுள்ளது.
உயிரிழப்புகள் குறித்து உடனடித் தகவல்கள் எதுவும் இல்லை என்றும், ஆனால் பலத்த அதிர்வு காரணமாக சிலர் மயக்கமடைந்ததாகவும் கூறப்படுகின்றது.















