கனடா

சிறுவர்களுக்கு சமூக ஊடகத்தை தடை செய்ய கனடாவால் புதிய சட்டமூலம்!


16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்கான புதிய சட்டமூலம் ஒன்றை கனடா அரசு சமர்ப்பித்துள்ளது. 

கடந்த ஆண்டின் இறுதியில் அவுஸ்திரேலியாவால் விதிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய சட்டத்தைப் போன்றதொரு நடவடிக்கையையே கனடாவும் தற்போது எடுத்துள்ளது. 

கனடா பாராளுமன்றத்தின் கலாச்சார அமைச்சர் மார்க் மில்லரால் நேற்று (10) ‘பாதுகாப்பான சமூக ஊடகச் சட்டம்’ என்ற பெயரில் இந்த வரைவுச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது. 

இருப்பினும், அவுஸ்திரேலிய சட்டத்தை விட கனடாவின் இந்த புதிய சட்டமூலம் சற்றே வித்தியாசமானது எனக் குறிப்பிடப்படுகிறது. 

அதன்படி, சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கான முறையான கொள்கைகளைச் செயல்படுத்துவதை உறுதிப்படுத்தக்கூடிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, இந்தத் தடையிலிருந்து விலக்கு பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். 

இந்த புதிய சட்டத்தின் மூலம் ‘ChatGPT’ போன்ற AI செட்போட்களை ஒழுங்குபடுத்தவும், இணையம் வழியாக பரவும் “தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை” கட்டுப்படுத்தவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

இதன் கீழ் சிறுவர்களை அவதூறு செய்தல், வெறுப்பை பரப்புதல் மற்றும் வன்முறையைத் தூண்டுதல் உள்ளிட்ட 7 துறைகளின் கீழ் வரும் விடயங்கள் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்த விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு 10 மில்லியன் கனேடிய டொலர்கள் (7 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) அல்லது அந்த நிறுவனத்தின் உலகளாவிய மொத்த வருவாயில் 3% அபராதமாக விதிக்கப்படும். 

வழக்குத் தொடர்தல் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல்களைக் கண்காணிப்பதற்காக ‘கனடா டிஜிட்டல் பாதுகாப்பு ஆணைக்குழு’ என்ற பெயரில் ஒரு சுயாதீன அமைப்பும் நிறுவப்படவுள்ளது. 

கடந்த பெப்ரவரி மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நடந்த துரதிர்ஷ்டவசமான துப்பாக்கிச் சூட்டில் சிறுவர்கள் 6 பேர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். 

அங்கு, 18 வயதுடைய சந்தேக நபர் தாக்குதலுக்கு சில மாதங்களுக்கு முன்பு துப்பாக்கிகள் குறித்து ‘ChatGPT’ மூலம் கலந்துரையாடியுள்ளமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

இந்தக் கணக்கு குறித்து பொலிஸாருக்கு அறிக்கை செய்ய OpenAI நிறுவனம் தவறியதன் காரணமாக, அதன் தலைமை நிர்வாக அதிகாரி செம் எல்ட்மேன் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்கவும் வேண்டியிருந்தது. 

இச்சம்பவத்திற்குப் பிறகு, இணையப் பாதுகாப்பு குறித்து கனடாவுக்கு ஏற்பட்ட அழுத்தம் தீவிரமடைந்தது. 

அடுத்த வாரம் பிரான்சில் நடைபெறவுள்ள G7 நாடுகளின் தலைவர்கள் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக கனடா இந்தச் சட்டமூலத்தைக் கொண்டுவந்துள்ளது. 

அந்த உச்சிமாநாட்டிலும் சிறுவர்களை இணையத்திலிருந்து பாதுகாப்பது மற்றும் AI தொழில்நுட்பத்தின் அபாயங்கள் குறித்து உலகத் தலைவர்கள் விவாதிக்கவுள்ளனர். 

ஏற்கனவே பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இவ்வாறான சட்டங்களை விதித்துள்ளதுடன், பிரிட்டனும் அடுத்த வாரம் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடையை அறிவிக்கத் தயாராகி வருகிறது. 

கிரீஸ் நாடு வரும் ஜனவரி முதல் 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு இந்தத் தடையை விதிக்கவுள்ளது. 

இந்தச் சட்டமூலத்தின் மூலம் இணைய தணிக்கை அல்லது கருத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படலாம் என்று சில தாராளவாத அமைப்புகள் எச்சரிக்கின்றன. 

இப்பிரச்சினையை கனடாவில் உள்ள சாதாரண குற்றவியல் சட்டக்கோவையின் கீழ் தீர்க்க வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…