அரசாங்கத்திடம் போக்குவரத்து சங்கங்கள் கோரிக்கை!

தனியார் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பாடசாலை போக்குவரத்து வாகனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு முன்னதாக, நிலவும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல் நடத்துமாறு போக்குவரத்து சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்தார்.

தனியார் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள், பாடசாலை மாணவர் போக்குவரத்து வாகனங்கள் உள்ளிட்ட பல போக்குவரத்து முறைகளை ஒழுங்குபடுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், இதற்கான அனைத்து அதிகாரங்களையும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க சமீபத்தில் பாராளுமன்றத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதன்படி, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திருத்த சட்டமூலம் சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதோடு, தனியார் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பாடசாலை மாணவர் போக்குவரத்து வாகனங்கள் உட்பட பல போக்குவரத்து முறைகளை ஒழுங்குபடுத்த தேவையான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் மல்ஸ்ரீ டி சில்வா, இது தொடர்பில் கருத்து வௌியிடுகையில்,

ஒழுங்குமுறைக்கு முன் செய்ய வேண்டிய விடயங்கள் நிறைய உள்ளன. ஒவ்வொரு முறையும் இதை செய்ய நினைத்தோம். ஆனால் இதன் மூலம் எங்களுக்கு எதுவும் நடக்காது, அரசாங்கத்திற்கு வருமானம் கிடைப்பது மட்டுமே நடக்கும். எங்களுக்கு அப்படியான விடயங்கள் பிடிக்காது. அவர்கள் இதை ஒழுங்குபடுத்த நினைத்தால் எங்கள் பிரச்சினைகளை கேட்டு, தேவையான தீர்வுகளை வழங்கிய பின்னர் இவற்றைச் செய்தால் நல்லது என்று நாங்கள் நினைக்கிறோம். ஒழுங்குமுறை ஒரு நல்ல விடயமாக இருக்க வேண்டும். ஒழுங்குமுறை என்று கூறி பணம் வசூலித்துவிட்டு அதனூடாக எங்களுக்கு எதுவும் நடக்கவில்லை என்றால், அது பயனற்றது. அது நன்றாக நடக்கிறதா என்று பார்ப்போம். இல்லையெனில், நாம் தொழிற்சங்க நடவடிக்கையை நாட வேண்டியிருக்கும்.

இந்த விடயம் தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் ‘அத தெரண’ செய்திப் பிரிவு வினவிய போது, ஒழுங்குமுறைக்கு முன்னர், தேவையான விதிமுறைகள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி, மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதன் தலைவர் பி.ஏ.சந்திரபால தெரிவித்தார்.

Exit mobile version