No products in the cart.
தையிட்டில் காணி அளவீட்டு நடவடிக்கையை அரசு தடுக்கிறது..! இரத்தினசிங்கம் முரளிதரன் குற்றச்சாட்டு
மே முதலாம் திகதி அன்று தமிழ் தேசிய கட்சிகள், பொது அமைப்புகள் தாங்கள் மேற்கொள்ளும் வழமையான மே தின எழுச்சி கூட்டங்கள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தையிட்டியில் நடத்துமாறு காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இன்று(20.04.2026) வடமராட்சி கிழக்கில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்வரும் மே முதலாம் திகதி தொழிலாளர் தினமாகவும், சித்திரை பௌர்ணமியாகவும், மற்றும் சிங்கள மக்களுடைய பௌர்ணமி தினமும் இடம் பெறுகின்ற ஒரு முக்கிய நாளாகும்.
அன்றைய நாளிலே வடக்கு கிழக்கு தழுவிய தமிழ் தேசிய கட்சிகள் சமூக செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகள், வழமையாக மே ஒன்று அன்று நடத்துகின்ற எழுச்சி போராட்டங்கள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தையிட்டி விகாரைக்கு எதிராக மேற்கொண்டு பாரிய எதிர்ப்பாக வெளிக்கொண்டு வருமாறு காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் ரத்தினசிங்கம் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மேலும், தையிட்டி காணி விடுவிப்பு என்று அளவீடு செய்ய மேற்கொண்ட விடயம் என்பது ஒரு ஆச்சரியமான விடயம்.
ஏற்கனவே காணிகளை விடுவிக்கும் போது அவை நில அளவீடு செய்து மாவட்ட செயலாளரிடம் கையளிக்கப்பட்டு பின்னரே அது உரிய காணி உரிமையாளர்களுக்கு கையளிக்கப்படுவது வழமையாக இருக்கின்ற போதும், இந்த முறை தையிட்டி காணியை விடுவிப்பதாக கூறி காணி அளவிடும் முயற்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.
அவ்வாறு இடம்பெறுகின்ற போது மக்கள் எதிர்த்து காணி அளவீட்டை தடுத்தால் காணி விடுவிப்பதை மக்கள் தடுத்தார்கள் என்ற காரணம் காட்டி அந்த காணியை அபகரிப்பதற்கான ஒரு சூழ்ச்சியாக இடம்பெற்றிருந்ததாகவும், ஆனால் மக்கள் காணி அளவீடு செய்ய வேண்டிய நிலை இருந்த போதிலும், அது சூழ்ச்சியினால் பலிக்காமல் சென்று விட்டது.
தையிட்டி விகாரையின் விகாராதிபதி ஊடாக பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்து, காணி அளவீடு செய்வதை தடுக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டதாகவும் முரளிதரன் குற்றம் சாட்டியுள்ளார்.













