இலங்கை

மலையகத்தில் போதைப்பொருள் விற்பனை – ‘மஹரகம அக்கா’ கைது

நுவரெலியா, வெலிமடை, பண்டாரவளை மற்றும் கெப்பட்டிபொல ஆகிய பகுதிகளில் ஈஸி கேஷ் (Ez Cash) முறையைப் பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனை செய்து வந்த ‘மஹரகம அக்கா’ என அடையாளம் காணப்பட்ட 50 வயதுடைய பெண் ஒருவர், நுவரெலியா பொலிஸ் ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதலின் போது கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் விற்பனை வலையமைப்பை விசாரித்ததில், அந்தப் பெண் நுவரெலியா மாவட்டத்தில் பல இடங்களில் வாடிக்கையாளர்களுடன் ஈஸி கேஷ் வழியாகப் பணப் பரிமாற்றம் செய்து வந்தது கண்டறியப்பட்டது. மேலும், போதைப்பொருள் வாங்கியவர்களின் தொலைபேசிப் பதிவுகளைப் பகுப்பாய்வு செய்தபோது, சந்தேக நபர் ஹங்வெல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது. சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, நவம்பர் 6 ஆம் திகதி வியாழக்கிழமை நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், அவருடைய இல்லத்தில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் ரூபா 1,41,000 பணம் மற்றும் 32 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டன. சந்தேக நபர் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். நுவரெலியா பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், “‘மஹரகம அக்கா” நீண்டகாலமாக நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் இரகசியமாக போதைப்பொருள் விற்பனை செய்து வந்திருக்கலாம் எனத் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…