குஞ்சுக்குளம் தேக்கம் பகுதியில் சிக்கித் தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீட்பு

புயல் மற்றும் மல்வத்து ஓயா ஆற்று வெள்ளம் காரணமாக கடந்த மூன்று நாட்களாக குஞ்சுக்குளம் தேக்கம் அணைக்கட்டு அருகில் சிக்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (30) காலை மீட்கப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தொடர் முயற்சியின் பலனாக இலங்கை விமானப்படையின் உதவியுடன் இன்று காலை கணவன், மனைவி மற்றும் 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் உள்ளடங்களாக மூவர் வானூர்தி மூலம் மீட்கப்பட்டனர்.

குறித்த மூவரும் சுமார் இரண்டு மணி நேர போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டு வவுனியா ஜோசப் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து வவுனியா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மன்னார் மாவட்டத்தின் ஏனைய பல இடங்களில் சிக்கி தவிப்பவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை விமானப்படை முன்னெடுத்து வருகின்ற போதும் சீரற்ற வானிலை காரணமாக மீட்பு பணிகள் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version