இலங்கை

கடந்த 24 மணி நேரத்தில் அக்குரஸ்ஸவில் அதிக மழைவீழ்ச்சி

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவான மழைவீழ்ச்சி நில்வளா கங்கையை அண்டிய அக்குரஸ்ஸ பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் (நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்) பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார். 

இன்று (5) காலை அறிக்கையொன்றை வெளியிட்ட அவர், அப்பிரதேசத்தில் 125 மி.மீ. இற்கு அண்மித்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார். 

எனினும், ஏனைய பல பிரதேசங்களில் சாதாரண மழைவீழ்ச்சியே பெய்துள்ளதாகவும், கங்கைகளின் நீர்மட்டங்களில் பெரிய அதிகரிப்பைக் காட்டவில்லை எனவும் அவர் கூறினார். 

அத்துடன் ஏனைய பிரதேசங்களில் மழை பெய்யாததினால் கங்கைகளின் நீர்மட்டங்களில் அதிகரிப்பு ஏற்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

இதேவேளை, குளங்கள் கட்டமைப்பில் அபாயகரமான வான் பாயும் நிலைமை இல்லை எனவும், பல குளங்கள் வான் மட்டத்திலோ அல்லது சாதாரண அளவிலோ வான் பாய்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

எனினும், மழைவீழ்ச்சி அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாகவும், அதனால் எதிர்காலத்தில் கிடைக்கும் மழைவீழ்ச்சிக்கு ஏற்ப அந்தந்த கங்கைகளின் அளவீட்டு நிலையங்களின் தரவுகளைக் கருத்திற்கொண்டு மக்களுக்கு அறிவிப்பதாகவும் அவர் கூறினார். 

ஆகவே அச்சமடைவதைத் தவிர்க்குமாறும், உத்தியோகபூர்வ அறிவிப்புகளைத் தவிர வதந்திகள் குறித்து அவதானமாக இருக்குமாறும் அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…