No products in the cart.
படையினரின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக கலந்துரையாடல்!
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வாவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை (03.02.2026) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாகக் கடந்த 27ஆம் திகதி கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வா, வடக்கு மாகாண ஆளுநரை இன்று சம்பிரதாயபூர்வமாகச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பொதுமக்களின் காணிகளை விடுவித்தல் தொடர்பாகவும், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட காணி விடுவிப்புக்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாயப் பண்ணைகளை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் மற்றும் அதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
பாதுகாப்புத் தரப்பினரால் நிர்வகிக்கப்படும் வர்த்தக நிலையங்கள் தொடர்பாகவும் ஆளுநரால் இச்சந்திப்பின் போது சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், பாதுகாப்புத் தரப்பினர் கடந்த காலங்களில் வழங்கிய ஒத்துழைப்புக்கள் குறித்தும் இதன்போது கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
















