இலங்கை

QR முறைமையில் முன்னேற்றம் – தெளிவுபடுத்திய அமைச்சர்!

எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காகப் பயன்படுத்தப்படும் QR குறியீடு தொடர்பான பெரும்பாலான சிக்கல்கள் தற்போது தீர்க்கப்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே QR குறியீடு இருந்த ஒரு வாகனம் மற்றும் அதன் இலக்கம் மாறாமல் இருக்கும் சந்தர்ப்பங்களில், எந்தவித சிக்கலுமின்றி அதே QR குறியீட்டைப் பயன்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், வாகனம் ஒன்றாகவே இருந்தாலும் அதன் இலக்கம் புதிதாக மாற்றப்பட்ட சந்தர்ப்பங்களில், புதிய QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதற்குச் சற்று கால அவகாசம் வழங்க வேண்டியிருந்ததாகவும் அவர் கூறினார்.

மேலும், புதிய வாகனங்களை கொள்வனவு செய்தவர்கள் எதிர்நோக்கிய சிக்கல்கள் தற்போது முழுமையாகத் தீர்க்கப்பட்டுள்ளதுடன், அந்தச் செயல்முறை வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது எஞ்சியுள்ள பிரதான சிக்கல் வாகனத்தின் உரிமையாளர் மாற்றம் தொடர்பானது என அமைச்சர் விளக்கமளித்தார். 

அத்தகைய சந்தர்ப்பங்களில், முந்தைய உரிமையாளரின் QR குறியீடு நீக்கப்படாததால் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அந்தப் பிரச்சினையும் தற்போது சரிசெய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஒரு மணித்தியாலத்திற்கு சுமார் 30,000 வாகனங்கள் முறைமையில் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், இது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எனவும் அவர் வலியுறுத்தினார். 

அதன்படி, QR குறியீட்டு முறைமை தொடர்பான பெரும்பாலான சிக்கல்கள் தற்போது வெற்றிகரமாகத் தீர்க்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…