No products in the cart.
QR இன்றி விவசாயிகளுக்கு இன்று முதல் எரிபொருள்!
கமநல சேவைகள் திணைக்களத்தினால் எரிசக்தி அமைச்சுக்கு வழங்கப்பட்ட பெயர்ப்பட்டியலுக்கு அமைய, விவசாயிகளுக்கு இன்று (19) முதல் எரிபொருள் விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
‘தெரண BIG FOCUS’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் சுமித் சந்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, எரிசக்தி அமைச்சுக்குக் கிடைத்துள்ள அனைத்துப் பட்டியல்களும் தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நெரிசல் காணப்படுவதால், விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு நிலைய உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுமித் சந்தன தெரிவித்தார்.
தற்போது பெரும் போக அறுவடையை ஆரம்பித்துள்ள விவசாயிகளும், சிறு போகத்தை ஆரம்பிக்கவுள்ள விவசாயிகளும் எவ்வித நெருக்கடியுமின்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அறுவடை அல்லது நிலத் தயாரிப்புப் பணிகளுக்காக எரிபொருள் தேவைப்படும் விவசாயிகளின் விபரங்களை கமநல சேவை நிலையங்கள் ஊடாகப் பட்டியலிடுகிறோம்.
விவசாயிகளின் அனைத்துத் தகவல்களும் எம்மிடம் இருப்பதால் இந்தப் பட்டியலைத் தயாரிப்பது கடினமான காரியமல்ல.
ஏற்கனவே அறுவடை செய்தவர்களைத் தவிர்த்து ஏனையோரின் விபரங்களை எடுத்து எரிசக்தி அமைச்சுக்கு அனுப்புகிறோம்.
அவர்கள் அதனை அந்தந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அனுப்புவார்கள். பட்டியலைத் தயாரிக்கும் போதே, விவசாயிக்கு இலகுவான எரிபொருள் நிரப்பு நிலையம் எது என்ற விபரத்தையும் பெற்றுக்கொள்கிறோம்.
விவசாயத் திணைக்களத்தின் தகவல்களுக்கு அமைய, நாம் ஒரு குறிப்பிட்ட அளவைத் தீர்மானித்துள்ளோம். அதன்படி, அறுவடைப் பணிகளுக்காக ஒரு ஏக்கருக்கு 15 லீற்றரும், நிலத்தை பதப்படுத்தும் பணிகளுக்காக ஒரு ஏக்கருக்கு 30 லீற்றர் எரிபொருளும் கிவ் ஆர் முறையின்றி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
















