No products in the cart.
கலாசார பாரம்பரியத்தை பாதுகாக்க அரசின் முக்கிய நடவடிக்கை
மன்னார் மாவட்டத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மன்னார் டச்சுக் கோட்டையின் (Mannar Dutch Fort) தற்போதைய நிலைமைகள் மற்றும் அதன் புனரமைப்புத் தேவைகள் குறித்து ஆராயும் பொருட்டு, வடமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின்பிரதிநிதிகள் இன்று (28) நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
இந்த விஜயத்தின் போது, கோட்டையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் சிதைவடைந்து வருவதை அவதானித்த அதிகாரிகள், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினர்.
கோட்டையின் தொன்மை மாறாமல் பாதுகாப்பதோடு, நவீன சுற்றுலாத் தரத்திற்கு ஏற்ப அதனை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மன்னார் மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த இவ்வாறான வரலாற்றுத் தலங்களை முறையாகப் பராமரிப்பதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இக்கள விஜயத்தில் வடமாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர், தேசிய மக்கள் சக்தியின் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
அவர்கள் கோட்டையின் ஒவ்வொரு பகுதியையும் பார்வையிட்டதுடன், அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர திருத்தப் பணிகள் குறித்துக் கேட்டறிந்தனர். அதேநேரம், 108 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படும் இப்புனரமைப்புச் செயற்திட்டத்தை விரைவாக நிறைவு செய்யுமாறு சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.















