No products in the cart.
“த.வெ.க. ஆட்சி அமைப்பதில் தொடரும் சிக்கல்!”
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதை சுட்டிக்காட்டி, த.வெ.க.வை ஆட்சியமைக்க தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகர் அழைப்பு விடுக்கவில்லை.
இதையடுத்து, பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில் த.வெ.க. ஈடுபட்டது. தங்களுக்கு ஆதரவு வழங்குமாறு தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள வி.சி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐ.யூ.எம்.எல்.) ஆகிய கட்சிகளுக்கு த.வெ.க. அழைப்பு விடுத்தது.
இது தொடர்பாக அந்தந்த கட்சிகள் சார்பில் தங்களது நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. தற்போது வரை இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் த.வெ.க. ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன.
மேலும் வி.சி.க. ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் தெரிவித்திருந்தனர். அதோடு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐ.யூ.எம்.எல்.) கட்சியும் த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்ததாக தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து விஜய் இன்று மாலை கவர்னரை சென்று சந்தித்தார். அப்போது தனக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளின் கடிதங்களை கவர்னரிடம் அவர் வழங்கி, ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதையடுத்து நாளை தமிழக முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது விஜய்க்கு ஆதரவு இல்லை என இந்திய யூனியஸ் முஸ்லிம் லீக் கட்சி கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இதுவரை த.வெ.க. ஆதரவு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. த.வெ.க. தலைவர் விஜய் கவர்னரை சந்தித்தபோது, வி.சி.க. மற்றும் ஐ.யூ.எம்.எல். ஆகிய கட்சிகளின் ஆதரவு கடிதங்களை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
அவ்வாறு இருக்கும்பட்சத்தில், கவர்னர் ஏற்கனவே கேட்டபடி ஆட்சியமைப்பதற்கு தேவையான 118 என்ற பெரும்பான்மை இடங்கள் த.வெ.க.வுக்கு இல்லை என்றே தெரிகிறது.
இதனால் த.வெ.க. ஆட்சி அமைப்பதில் சிக்கல் தொடர்ந்து நீடித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி த.வெ.க. பெரும்பான்மையை காட்டுவதற்கு 2 இடங்கள் தேவைப்படுகிறது. இந்த சூழலில், த.வெ.க.வின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு எவ்வாறு அமையப்போகிறது? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.















