No products in the cart.
விபத்துக்களில் மூன்று இளைஞர்கள் உட்பட 4 பேர் பலி!
நாடளாவிய ரீதியில் பல இடங்களில் இடம்பெற்ற கோர விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றைய தினம் (13) அஹங்கம, திருக்கோவில், வெலிவேரிய மற்றும் பிடிகல ஆகிய இடங்களில் இவ்விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
நேற்று அதிகாலை அஹங்கம – இமதுவ வீதியில் கடுகஹவத்தை சந்திக்கு அருகில், மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியதில் விபத்து ஒன்று ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த 25 வயதுடைய அஹங்கம பகுதியைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார்.
இதேவேளை, நேற்று காலை திருக்கோவில் – பொத்துவில் வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதேவேளை, நேற்று மாலை ரத்துபஸ்வல – ஹேனேகம வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்ததில், எதிரே வந்த லொறியுடன் மோதி விபத்து ஒன்று ஏற்பட்டது. இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த 24 வயதுடைய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல், நேற்று காலை பிடிகல – பெலவத்தை வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கல்வெட்டு ஒன்றில் மோதியதில் 21 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்தந்தப் பகுதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.















