உலகம்

ஈரான் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தம்

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்படிக்கையொன்றை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில், ஈரான் மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்த தாக்குதலை தாம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

இதன்போது கருத்துத் தெரிவித்த ட்ரம்ப், “நாளை ஈரான் மீது நடத்தவிருந்த தாக்குதலை மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்க இராணுவத்திற்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். எனினும், ஏற்றுக்கொள்ளக்கூடிய உடன்படிக்கையொன்றை எட்ட முடியாவிட்டால், உடனடி அறிவித்தலின் மூலம் ஈரான் மீது முழுமையான, பாரியளவிலான அளவிலான தாக்குதலை நடத்துவதற்கு தயாராக இருக்குமாறு அவர்களுக்கு மேலும் உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார். 

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உடன்படிக்கையை எட்டுவதற்கு கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளாகியிருக்கும் ட்ரம்ப், இதற்கு முன்னரும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்படிக்கையொன்று மிக அருகில் உள்ளதாக நம்பிக்கை வெளியிட்டிருந்ததுடன், உடன்படிக்கை எட்டப்படாவிட்டால் ஈரான் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என இதே போன்று எச்சரித்திருந்தார். 

அவரது சமூக ஊடகப் பதிவின்படி, கட்டார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இந்தத் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்துமாறு அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

அமெரிக்காவிற்கும், மத்திய கிழக்கு மற்றும் அதற்கு அப்பாலுள்ள அனைத்து நாடுகளுக்கும் மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு உடன்படிக்கையை இதன் மூலம் எட்ட முடியும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இருப்பினும், தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் உடன்படிக்கையின் விபரங்களை அவர் வெளியிடவில்லை.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…