இலங்கை

இரு இளைஞர்களின் உயிரைப் பறித்த கோர விபத்து

அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ட்ராக்டர் சந்திக்கு அருகில், டிப்பர் வாகனமொன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

புத்தங்கல பகுதியிலிருந்து ஹோல்மன்கல நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனம், பாலிகா சுற்றுவட்டம் பகுதியிலிருந்து அம்பாறை பொது வைத்தியசாலை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியுடன் மோதி நேற்றிரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பின்னால் பயணித்த மேலும் மூவர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் தடயந்தலாவ மற்றும் நவகம்புர பிரதேசங்களைச் சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்கள் ஆவர். 

விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, அம்பாறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கொஸ்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலி – கொழும்பு பிரதான வீதியில் யாலேகம சந்திக்கு அருகில், காலி நோக்கிப் பயணித்த அடையாளம் தெரியாத வாகனமொன்று பாதசாரி ஒருவர் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போதே உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. விபத்தை ஏற்படுத்திய வாகனம் தப்பிச் சென்றுள்ள நிலையில், சந்தேகநபரான சாரதியைக் கைது செய்ய கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…