No products in the cart.
மட்டக்களப்பில் கோர விபத்து – இளைஞன் பலி
மட்டக்களப்பு புதூரில் உள்ள இலங்கை விமானப்படை முகாமுக்கு முன்னால் உள்ள வீதியில், மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வாவியில் வீழ்ந்ததில், இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (27) மாலை இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு, திருப்பெருந்துறை, 04 ஆம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விமானப்படை முகாமிற்கு அருகில் உள்ள வீதியில் குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளை வேகமாகச் செலுத்திச் சென்றபோது, வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடம்புரண்டு அருகில் இருந்த வாவியில் வீழ்ந்துள்ளது. இதன்போது இளைஞர் நீரில் மூழ்கியுள்ளார்.
சம்பவத்தையடுத்து, விமானப்படையினரும் பொதுமக்களும் இணைந்து குறித்த இளைஞரை வாவியிலிருந்து மீட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.















