No products in the cart.
கவனயீனத்தால் 2 வயது குழந்தை பலியான சோகம்
கண்டி – தலாத்துஒய, மயிலபிட்டிய பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு வருடமும் இரண்டு மாதங்களும் மதிக்கத்தக்க சிறுமியொருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று (03) பிற்பகல் தென்னகும்பூர – ராகல வீதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
தென்னகும்பூர நோக்கி பயணித்த சொகுசு கார் ஒன்று, மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது, எதிர்த்திசையில் வந்த மூன்று சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து நேரிட்ட சமயத்தில், அந்தச் சிறுமி முச்சக்கரவண்டியின் பின் ஆசனத்தில் அமர்ந்து பயணித்துள்ளதாகத் தெரியவருகிறது.
இந்த விபத்தினால் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலத்த காயமடைந்துள்ளதோடு, அவர்கள் உடனடியாக ஹங்குரன்கெத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவி சிகிச்சை பெற்று வந்த அந்தச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தவர் உனுவின்ன பகுதியைச் சேர்ந்த சிறுமியாவார்.
காயமடைந்த சிறுமியின் தாயும், முச்சக்கரவண்டியை செலுத்திய தந்தையும் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி தற்போது தலாத்துஒய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து குறித்து தலாத்துஒய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.















