கிரிக்கட்விளையாட்டு

பழிதீர்க்குமா இந்தியா? இலங்கை ‘ஏ’ அணிக்கு இமாலய வெற்றி இலக்கு!

‘ஏ’ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிராக இந்திய ‘ஏ’ அணி 378 ஓட்டங்களை இமாலய வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.


தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை ‘ஏ’ அணியின் தலைவர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய ‘ஏ’ அணி, ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.


இந்திய அணியின் 15 வயது இளம் தொடக்க வீரரான வைபவ் சூர்யவண்ஷி ஆரம்பத்திலேயே ருத்ரதாண்டவம் ஆடினார். இலங்கை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த அவர், வெறும் 11 பந்துகளில் அரைசதம் (50 ஓட்டங்கள்) கடந்து ‘லிஸ்ட் ஏ’ (List A) கிரிக்கெட் வரலாற்றில் மிக அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர் என்ற உலக சாதனையைப் படைத்தார்.

தொடக்க வீரர்களின் அதிரடியைத் தொடர்ந்து, நடுத்தர வரிசை வீரராக களம் புகுந்த அணித்தலைவர் திலக் வர்மா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 67 ஓட்டங்களை எடுத்தார்.


அவருக்கு பக்கபலமாக விளையாடிய குமார் குஷாக்ரா 36 ஓட்டங்களும், ருதுராஜ் கெய்க்வாட் 40 ஓட்டங்களும் எடுத்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.


இறுதிக்கட்டத்தில் விப்ராஜ் நிகாம் 27 ஓட்டங்களையும், அனுகுல் ராய் அதிரடியாக 12 பந்துகளில் 39 ஓட்டங்களும் குவிக்க, இந்திய ‘ஏ’ அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 377 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.


இலங்கை அணி சார்பில் குகதாஸ் மதுலன் மற்றும் ரவிந்து பெர்ணான்டோ ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.


கடந்த லீக் போட்டியில் இலங்கை ‘ஏ’ அணி சூப்பர் ஓவர் வரை சென்று இந்திய அணியை வீழ்த்தியிருந்ததால், அதற்கு பழிவாங்கும் நோக்கோடும் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் முனைப்போடும் இந்தியா இந்த இலக்கை நிர்ணயித்துள்ளது. 

What's your reaction?

Related Posts

உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத்தில் கலந்துகொள்ள ஈரான் அணி அமெரிக்கா செல்லுமா? இறுதி முடிவு எப்போது?

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவிருக்கும் இவ்வாண்டு உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் ஈரான் அணி தேசிய கால்பந்தாட்ட அணி பங்கேற்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களின்…