No products in the cart.
பல மாகாணங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!
இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பிரதேசங்களில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்று நிலைமை இன்றும் (01) தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்பதுடன், சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் மாத்தளை, அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிய அளவில் மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலையே நிலவும்.
மேல், சப்ரகமுவ, தென், வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.














