இலங்கை

இளவாலை வைத்தியசாலை சம்பவம் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

யாழ்ப்பாணம், இளவாலை பிரதேச வைத்தியசாலையில் அவசர சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட மாணவன் அனுமதிக்கப்படாதது மற்றும் அங்கு வைத்தியர்கள் கடமையில் இல்லாதிருந்தது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

கடந்த வியாழக்கிழமை இளவாலை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் திடீர் சுகவீனம் காரணமாக மயங்கி விழுந்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக அவர் உடனடியாக இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

எனினும், அந்த நேரத்தில் வைத்தியசாலையில் வைத்தியர்கள் எவரும் கடமையில் இல்லை எனக் கூறி, மாணவனை அனுமதிக்க வைத்தியசாலை ஊழியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். 

பாதிக்கப்பட்ட மாணவனுக்கு முதலுதவி வழங்குமாறும், மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி (Ambulance) மூலம் அனுப்பி வைக்குமாறும் மாணவனின் தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். 

எனினும், “நாங்கள் சிகிச்சை அளித்தால் அதற்கு நாங்களே பொறுப்பேற்க வேண்டும்” எனக் கூறி ஊழியர்கள் முதலுதவி அளிக்க மறுத்துள்ளனர். 

அத்துடன், வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி வசதி இல்லை எனக் கூறி, தனியார் வாகனம் ஒன்றில் மாணவனை அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். 

இதனையடுத்து, மயக்கமடைந்த நிலையில் இருந்த மாணவன் முச்சக்கர வண்டி மூலம் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். 

இச்சம்பவம் ஊடகங்களில் வெளியானதை அடுத்து, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் இது குறித்து தானாக முன்வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். 

இது தொடர்பாக இளவாலை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியிடம் முறையான விளக்கம் கோரப்பட்டுள்ளதுடன், வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…