No products in the cart.
அரிசி இறக்குமதி தொடர்ந்தும்
நுகர்வோருக்கு தட்டுப்பாடு இல்லாமல் அரிசியை வழங்கும் நோக்கில், எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு பரிந்துரைத்துள்ளது.
அறுவடை நடந்து கொண்டிருந்தாலும், தற்போது சந்தையில் அரிசியின் விலையில் அதிகரிப்பு இருப்பதாகவும், சந்தையில் சில வகையான அரிசிகளுக்கு பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, போதுமான அளவு அரிசி இருப்புகளைப் பராமரிப்பதற்காக அரிசியை இறக்குமதி செய்வதில் அமைச்சரவை கவனம் செலுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கொள்கை தீர்மானம் ஒன்றை எட்டுவதற்காக விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு நேற்று (01) 5வது முறையாக ஜனாதிபதி செயலகத்தில் கூடியது.
இந்த ஆண்டு நிலவிய பலத்த மழை காரணமாக இரண்டு முறை பயிர் சேதம் ஏற்பட்டதால் எதிர்பார்க்கப்பட்ட அறுவடை கணிசமாகக் குறைந்துள்ளதும் இந்த கலந்துரையாடலின் போது தெரியவந்தது.
கால்நடை தீவனத்திற்காக அரிசியை ஒழுங்கற்ற முறையில் பயன்படுத்துவது அரிசி பற்றாக்குறைக்கு மற்றொரு முக்கிய காரணம் என இதன்போது தெரிவிக்கப்பட்டதுடன், கால்நடை உற்பத்தித் துறையில் கால்நடை தீவனத் தேவைகளுக்காக உடைந்த அரிசியை இறக்குமதி செய்வது மற்றும் மாற்று தீவனத்தைப் பயன்படுத்துவது குறித்தும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.
அதன்படி, உரிய நடைமுறைகளைப் பின்பற்றி தேவையான அளவு உடைந்த அரிசியை இறக்குமதி செய்வதற்காக விவசாய பணிப்பாளர் நாயகம் தலைமையிலான குழுவை நியமிப்பதற்கும் உணவுப் பாதுகாப்புக் குழு அனுமதி அளித்துள்ளது.