இலங்கை

மழை குறைந்தாலும் மண் சரிவு அபாயம் நீங்கவில்லை – பொது மக்களுக்கு எச்சரிக்கை

மழையுடனான காலநிலை குறைவடைந்த போதும் மத்திய மலைப்பகுதிகளில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் நீர் படிப்படியாக கீழ்நோக்கி நகர்ந்து வருகிறது.

எனவே வெள்ள அச்சுறுத்தல் தொடர்பாக நீர்ப்பாசனத் திணைக்கள அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனத்தில் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்பொழுது நாட்டிலுள்ள சகல இடங்களிலும் மண் ஈரப்பதமாக இருப்பதால், சில சமயங்களில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே மக்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லும்போது இது குறித்துக் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு,திருகோணமலை முதல் காங்கேசன்துறை வரையிலான கரையோரப் பகுதியில் மீன்பிடி மற்றும் கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வளிமண்டவியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் மீனவர் சமூகத்திற்கு அறிவித்துள்ளார்.

சூறாவளியின் நேரடித் தாக்கம் நீங்கியுள்ள போதிலும், அதன் மறைமுகத் தாக்கம் இன்னும் நீடிக்கிறது. காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோமீட்டர் வரை அதிகரிக்கும் எனவும் கடல் அலைகள் 2-3 மீட்டர் வரை உயரும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஏனைய கடல் பகுதிகளில் காற்றின் வேகம் குறைந்துள்ளதால், மீன்பிடி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து மீன்பிடித் திணைக்களத்துடன் கலந்தாலோசித்து பொருத்தமான முடிவுகளை எடுக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…