No products in the cart.
பாடசாலை போக்குவரத்து கட்டணம் இன்று முதல் உயர்வு!
எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து, பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் வாகனங்களின் கட்டணங்களை இன்று (10) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 5 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் லலித் சந்திரசிறி பெர்னாண்டோ, இதற்கு முன்னர் பலமுறை எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்ட போதிலும், நாட்டின் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு போக்குவரத்து கட்டணங்களில் மாற்றம் செய்யவில்லை எனக் குறிப்பிட்டார்.
இருப்பினும், இம்முறை டீசல் விலை 22 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஏனைய சங்கங்களுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் ஊடகங்களிடம் கூறினார்.
அதன்படி, குறித்த கட்டண திருத்தம் இன்று முதல் அமுலுக்கு வருவதாக லலித் சந்திரசிறி பெர்னாண்டோ தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:
“தூங்கி எழுந்திருக்கும் போது திடீரென எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. எமது போக்குவரத்து சங்கம் என்ற ரீதியில் கட்டணத்தை 5 வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளோம். அதன்படி, ஒரு பாடசாலை மாணவருக்கான கட்டணம் 10,000 ரூபாவாக இருந்தால், அது 500 ரூபாவினால் அதிகரிக்கும். 22 ரூபா விலை அதிகரிப்பானது போக்குவரத்து துறையில் எமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. விருப்பம் இல்லாவிட்டாலும் இந்த முடிவை எடுக்க வேண்டியதாயிற்று.” என்றார்.
















