No products in the cart.
மே மாதத்தில் இணைய மோசடி தொடர்பில் 360 முறைப்பாடுகள்
கடந்த ஒரு மாத காலத்திற்குள் இணையவழி நிதி மோசடிகள் தொடர்பாக 360க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார் நிலை குழு தெரிவித்துள்ளது.
அதன் முதன்மை தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவிக்கையில், இணையம் ஊடாக நிதிப் பரிமாற்றங்களை மேற்கொள்ளும் போது அதிக கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
கடந்த பண்டிகைக் காலத்தைப் போன்றே வெசாக் மற்றும் பொசோன் பண்டிகைக் காலங்களை முன்னிட்டும், பல சந்தர்ப்பங்களில் பிரபல வர்த்தக நாமங்களின் பெயர்களைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் வகையில் வெளியிடப்பட்ட போலி விளம்பரங்கள் ஊடாக தகவல்களைப் பெற்றுக்கொண்டமை மற்றும் கடன் அட்டைகளின் தகவல்களைப் பெற்றுக்கொண்டமை போன்ற சம்பவங்கள் கடந்த மாதம் முழுவதும் பதிவாகியுள்ளன.
இது குறித்து பொதுமக்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும். ஏதேனும் ஒரு கொடுப்பனவை மேற்கொள்வதாயின், அது சரியான இணையதளத்தின் ஊடாகத்தான் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
குறுஞ்செய்திகள் மூலம் கிடைக்கப் பெறும் இணையதள இணைப்புகளில் உங்களுடைய தகவல்களை உள்ளிடுவதை எக்காரணம் கொண்டும் செய்யக் கூடாது என தெரிவித்துள்ளார்.















