No products in the cart.
ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை தேவையுள்ள நோயாளிகளுக்காக மேலும் விரிவுப்படுத்த அர்ப்பணிப்போம் – ஜனாதிபதியின் செயலாளர்!
ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச மட்டத்திற்கு விரிவுபடுத்தும் நடவடிக்கையின் கீழ், மேல் மாகாணத்தின் பிரதேச செயலகங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கான விசேட பயிற்சி செயலமர்வு சனிக்கிழமை (17) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்றது.
கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாணத்தின் அனைத்து பிரதேச செயலகங்களிலும் நிதியத்தின் செயற்பாடுகளை நேரடியாக மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு, நடைமுறை மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்கும் நோக்கில் இச்செயலமர்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஜனாதிபதி ஊடக ஆலோசகர் சந்தன சூரியபண்டார, அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கிடையில் சிறந்த தொடர்பாடலை உருவாக்கும் முறைகள் குறித்து விரிவாக விளக்கினார்.
மருத்துவ உதவி விண்ணப்ப செயல்முறைகள், கணினி கட்டமைப்பின் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு, பிரச்சினை தீர்வுகள் உள்ளிட்ட பல விடயங்களை உள்ளடக்கிய பயிற்சிகள், அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன.
ஜனாதிபதி நிதியின் சேவைகள் தற்போது பிரதேச மட்டத்திற்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளதால், அதிகமான மக்களுக்கு இந்த நிதியின் சேவைகளை எளிதாகக் கிடைக்கச் செய்ய முடிந்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க தெரிவித்துள்ளார்.
“மிகவும் தேவையுள்ளவர்களுக்கே சேவைகளை வழங்குவதே ஜனாதிபதி நிதியின் முக்கிய நோக்கம். இந்த சேவையின் மதிப்பை அரசாங்க அதிகாரிகள் புரிந்துகொண்டு, மக்களுக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்,” எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே தெரிவித்ததாவது, தற்போதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்கள் கணினி கட்டமைப்பில் பதிவாகியுள்ளன. இவற்றில் 40% மேல் மாகாணத்தைச் சேர்ந்த பிரதேச செயலகங்களில் இருந்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.2025 பிப்ரவரி 7 ஆம் திகதி முதல் பிரதேச செயலகங்களுக்கு விரிவுப்படுத்தப்பட்ட இந்த சேவையின் கீழ், தற்போது பெறப்படும் விண்ணப்பங்களில் 80% பிரதேச செயலகங்கள் மூலமாகவே கிடைக்கின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் பங்கேற்ற அதிகாரிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர்கள் பீ.எச். கொலம்பகே, பீ.ஆர். பிரசாத் பெரேரா, நிதியின் தலைமை கணக்காளர் டீ.ஏ.எம். விக்ரமரத்ன, உதவிச் செயலாளர் உஷானி ரத்நாயக்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.