No products in the cart.
கம்பஹா உள்ளிட்ட தாழ்நிலப் பகுதிகளில் நீர்மட்டம் மேலும் உயர்வு
கம்பஹா மாவட்டத்தில் அத்தனகலு ஓயாவின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் பணிப்பாளர், பொறியியலாளர் எல். ஏ. சூரியபண்டார கருத்துத் தெரிவிக்கையில்,
நேற்று (28) 300 மி.மீ. இற்கும் அதிகமான மழைவீழ்ச்சி தூனமலை பகுதியின் மேட்டு நிலப் பகுதியில் பதிவாகியுள்ளது என்றார்.
தற்போது தூனமலை நீர் அளவீட்டு நிலையம் அதன் உச்ச நிலையை அடைந்துள்ளதுடன், அந்த நிலையமும் நீரில் மூழ்கியுள்ளது என்று பணிப்பாளர் கூறினார்.
இதனால், கம்பஹா மாவட்டத்தின் கீழ் பகுதிகள் மற்றும் கம்பஹா நகரத்துடன், வத்தளை, ஜா-எல போன்ற பகுதிகளும் மேலும் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்வரும் 24 மணி நேரத்தில் மஹா ஓயாவை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் மிக அபாயகரமான வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மகா ஓயாவை அண்மித்த மேட்டு நிலப் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இந்த நிலைமை காரணமாக, மகா ஓயாவின் தாழ் நிலப் பகுதிகளில் அண்மைய வரலாற்றில் ஏற்படாத மட்டத்திலான மிக அபாயகரமான வெள்ளம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதனால் கிரிஉல்ல மற்றும் படல்கம அளவீட்டு மையங்களில் மிகவும் பாரிய நீர்மட்டம் எட்டப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
திவுலப்பிட்டிய, அளவ்வ, கட்டான, மீரிகம, தங்கொட்டுவ, பன்னல, நாரம்மல, நீர்கொழும்பு மற்றும் வென்னப்புவ ஆகிய பிரதேசங்களில் உள்ள தாழ் நிலங்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொதுமக்கள் முடிந்தவரை விரைவாகப் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
பல கங்கைகளின் தாழி நிலப் பகுதிகளில் தற்போது கடுமையான வெள்ள நிலைமை நிலவுவதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
















