இலங்கை

இரத்தினக்கல் வர்த்தகர் கொலை: காட்டில் மறைந்திருந்த சந்தேகநபர் கைது

கஹவத்தை இரத்தினக்கல் வர்த்தகரின் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கஹவத்தை, கட்டங்கே பகுதியில் உள்ள பற்றைக்காடு ஒன்றில் மறைந்திருந்த போதே, தெல்வல பொலிஸாரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இச்சம்பவம் தொடர்பாக பல விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டு முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னரே இவர் பிடிபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் கஹவத்துகந்த பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


கடந்த 29ஆம் திகதி கஹவத்தை, கட்டங்கே பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 28ஆம் திகதி குறித்த வர்த்தகர் கஹவத்தை – நீலகம வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளமை தெரியவந்தது.


பின்னர், அவரது மோட்டார் சைக்கிள் அவ்வீதியின் வளைவு ஒன்றிற்கு அருகாமையில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதுடன், கடந்த 29ஆம் திகதி அவரது கைபேசியும் அதே வீதியிலுள்ள தேயிலைத் தோட்டம் ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.


இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், காணாமல் போன வர்த்தகரின் சடலத்தை நேற்று (30) அகழ்வு குழி ஒன்றில் இருந்து மீட்டனர்.


அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளின் பலனாக, இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்வல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…