இலங்கை

4 CCD அதிகாரிகள் கைது நடவடிக்கைக்கு நீதிமன்ற இடைக்காலத் தடை

பாதாள உலகக் குழுத் தலைவர் எனக் கூறப்படும் மாகந்துரே மதுஷ் கொலை சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஜனக் நந்தன உள்ளிட்ட நான்கு அதிகாரிகளைக் கைது செய்வதைத் தடுத்து, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் பணியாற்றிய குறித்த அதிகாரிகளினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த பின்னரே, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். 

மாகந்துரே மதுஷ் கொலை சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அது தொடர்பில் தாம் எந்நேரமும் சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்படக்கூடிய அபாயம் இருப்பதாகவும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர். 

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் வழிகாட்டலின் கீழ் இந்த விசாரணை முன்னெடுக்கப்படுவதாகவும், அதன் மூலம் தமக்கு கடும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இதனடிப்படையில், தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறும், இந்த விசாரணையை குற்றப்புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிடமிருந்து நீக்குமாறும் மனுதாரர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். 

மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவுகளைப் பிறப்பித்ததுடன், குறித்த வழக்கை மீண்டும் மே மாதம் 15 ஆம் திகதி அழைப்பதற்கும் உத்தரவிட்டது. 

இதற்கு மேலதிகமாக, பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் (Notice) வழங்குமாறும் நீதியரசர் உத்தரவிட்டார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…