No products in the cart.
அரசாங்கம் பெற்றுக்கொண்ட வெளிநாட்டு கடன் 1,850 மில்லியனைத் தாண்டியது
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் 1,854 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகளவான வெளிநாட்டு கடன்களைப் பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு அமைவாக, நிதித் திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு இதனை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, 2024 ஜனாதிபதித் தேர்தலிலிருந்து இந்த ஆண்டு மே மாதம் 05ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள், சர்வதேச நாணய நிதியத்தைத் (IMF) தவிர்த்து, 1,854.77 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாகப் பெறப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்ட 18 திட்டங்களுக்கு அமைவாகவே இந்தக் கடன்கள் பெறப்பட்டுள்ளதுடன், இதில் பன்முகக் கடன்கள் மற்றும் இருதரப்புக் கடன்களும் உள்ளடங்குகின்றன.
இந்தக் கடன்கள் ஜப்பான், கொரியா, சவூதி அரேபியா, நெதர்லாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிடம் இருந்து பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், இலங்கை இதுவரையில் ஒட்டுமொத்தமாக 102.02 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாகப் பெற்றுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் ராஜாங்க அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறாயினும், நாட்டில் பொருளாதார வளர்ச்சியை அடைவதற்குத் தற்போதைய அரசாங்கத்திற்கு முடிந்துள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் வீழ்ச்சியடைவதை இன்னும் சற்று காலத்தில் பார்க்கக் கூடியதாக இருக்கும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் அனைத்துத் துறைகளிலும் சிக்கிக்கொண்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி, அண்மையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) செயற்குழுக் கூட்டத்திலேயே இந்தத் தரவுகளைத் தெரிவித்துள்ளார்.















