No products in the cart.
பிள்ளையானின் அலுவலகத்தில் தேடுதல் வேட்டை
மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இருந்து, 3 கைத்தொலைபேசிகள், ஒரு சாரதி அனுமதிப்பத்திரம், i pad ஒன்று, கடவுச்சீட்டு ஒன்று, 9 மில்லி மீற்றர் ரவை துப்பாக்கியின் 6 தோட்டாக்கள், ரிப்பிட்டர் ரக துப்பாக்கியின் 5 வெற்றுத் தோட்டாக்கள் என்பன சிஐடியினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தை, கொழும்பில் இருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வு துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து, நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியில் இருந்து இரவு 11 மணி வரை முற்றுகையிட்டு கட்டிட நிலத்தை உடைத்து தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
குறித்த தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த பொருட்கள் மீட்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15 ம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பிரயாணித்த நிலையில் அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனை கடந்த ஏப்பிரல் 8 ஆம் திகதி கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவியினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 3 மாதம் தடுப்புக்காவலில் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.