No products in the cart.
ஜம்மு காஷ்மீர் மேகவெடிப்பு: உயிரிழப்பு 60 ஆக உயர்வு
ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. அதாவது ஒரு மணி நேரத்தில் 10 சென்டி மீற்றர் மழை கொட்டியது. இதனால் சோஷ்டி கிராமத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது.
வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக, 16 குடியிருப்புகள், அரசு கட்டடங்கள், 3 கோயில்கள், 30 மீட்டர் அளவிலான மேம்பாலம், வாகனங்கள், மற்றும் ஒரு பாதுகாப்புப் படை முகாம் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன.
சோஷ்டி கிராமம் மச்சைல் மாதா கோயிலுக்கு செல்லும் வழி என்பதால் ஏராளமான யாத்ரீகர்கள் யாத்திரை மேற்கொண்டு வந்தனர். அப்போது ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலர் உயரிழந்தனர்.
இதில் 2 சிஐஎஸ்எஃப் வீரர்களும் அடங்குவர். அதேநேரம், பலர் மாயமாகி இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 160 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இதில் 30க்கும் அதிகமானோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியர்க்ள் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய இராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை , மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் பொலிஸ் ஆகியவை இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
மீட்பு பணிகளில் விமானப்படை வீரர்களும் இறங்கியுள்ளனர். ஆனால், மோசமான வானிலை காரணமாக ஹெலிகொப்டர் பயன்படுத்தி மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது.
பலத்த மழை மற்றும் கடினமான நிலப்பரப்பு காரணமாக மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து மசாயில் மாதா யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பாதிப்புகளை ஆய்வு செய்ய சோஷ்டி சென்ற மத்திய அமைச்சர் ஜித்தேந்திரா சிங்கின், ஹெலிகொப்டர் தரையிறங்க இடம் இல்லாததால் ஒரு மணி நேரம் வட்டமடித்து விட்டு மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிச் சென்றது.
பின்னர் சாலை மார்க்கமாக அமைச்சர் ஜித்தேந்திரா சிங், சோஷ்டி சென்றார்.
சோஷ்டி-க்கு அருகே உள்ள மச்சைல் மற்றும் ஹமோரி கிராமங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது… மின்சாரம் மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், கிராம மக்களின் நிலை குறித்து எதுவும் தெரியவில்லை என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.